17-7-2024 முதல் 16-8-2024 வரை
( மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை )
குடும்பம்: சுக்கிரன், புதன் ஆகிய இருவரும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை. பாக்கிய ஸ்தானத்தில், வக்கிர கதியில் சனி பகவான் அமர்ந்திருப்பதால், வரவிற்கு மீறிய செலவுகளை, நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும்!! தக்க தருணத்தில், எதிர்பாராத இடங்களிலிருந்து உதவி கிடைப்பது மனதிற்கு ஆறுதலை அளிக்கும். சுகஸ்தானத்தில் கேது இருப்பதால், குடும்பத்தில் உறவினரிடையே ஒற்றுமைக் குறைவும், அதன் காரணமாக மன அமைதி பாதிக்கப்படுவதும் ஏற்படும். திருமண முயற்சிகளுக்கு, ஏற்ற மாதம் இல்லை, இந்த ஆடி! குரு பகவானும், சாதகமாக இல்லாததால், தவறான வரனை நிச்சயித்துவிடும் வாய்ப்பு உள்ளதால், முயற்சிகளை ஒத்திப்போடுதல் அவசியமாகும். சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமாகும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பெண் அல்லது பிள்ளைகளின் பிரச்னை கவலையை ஏற்படுத்தும்.
உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவானும் நிலைகொண்டுள்ளதால், அன்றாடக் கடமைகளில் நீங்கள் கடுமையாக உழைக்க நேரிடும். பொறுப்புகளில் தவறுகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பாடுபட்டு உழைத்துங்கூட, மேலதிகாரிகளை திருப்தி செய்வது மிகவும் கடினம். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மிதுன ராசியினர், இடைத் தரகர்களால் ஏமாற்றப்படக்கூடும். எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. ஒருசிலருக்கு, பொறுப்புகள் மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. உயரதிகாரிகளுடன் அலுவலகம் சம்பந்தமான விஷயங்களை விவாதிக்கும்போது, பொறுமையும், சாதுர்யமும் அவசியம் தேவைப்படும். விருப்பத்திற்கு மாறான இடமாற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
தொழில், வியாபாரம்: மிகவும் ஜாக்கிரதையாகவும், சிக்கனமாகவும் இருக்கவேண்டிய மாதமிது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சந்தை நிலவரத்தில் நியாயமற்ற போட்டிகள் சற்று கடினமாகவே இருக்கும். நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையும். சகக் கூட்டாளினால் பிரச்னைகள் உண்டாகும். உற்பத்திற்கு அத்தியவசியமான மூலப் பொருட்களின் விலை உயரும். வெளிமாநிலத் தொழிலாளர்களின் நியாயமற்ற கோரிக்கைகள் கவலையை அளிக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் புதிய பிரச்னைகள் ஏற்படக்கூடும். லாபத்தைத் தக்க வைத்துக் ெகாள்ள கடினமாக பாடுபடவேண்டியிருக்கும். புதிய முதலீடுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
கலைத் துறையினர்: சுக்கிரன் ஒருவரே உங்களுக்கு ஆதரவாகச் சஞ்சரிக்கிறார். புதனும் ஓரளவே கைகொடுக்கும். மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் இம்மாதம் நீங்கள் சமாளிக்கவேண்டி வரும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிப்பது அவசியம்.
அரசியல் துறையினர்: சுக்கிரன், உங்களுக்கு ஆதரவாக வலம் வருவதால், இம்மாதம் முழுவதும் கட்சியில் ஆதரவு பெருகும். மேல்மட்டத் தலைவர்கள் உங்கள் கருத்துகளுக்கு, செவிசாய்ப்பார்கள். இருப்பினும், மறைமுக வருமானம் குறையக்கூடும்.
மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன், சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பாடங்களில் மனம் படியும். மனதில் தெளிவும், நினைவாற்றலும் மேலிடும். உயர் கல்விக்கு பண உதவி கிட்டும். உங்கள் விருப்பத்திற்கேற்ப மேற் படிப்பிற்கு இடம் கிடைக்கும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பெற விருப்பமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளில் இப்போது நீங்கள் ஈடுபடலாம். நேர்முகத் தேர்வுகளில், எளிதாக வெற்றிபெற்று விடுவீர்கள்.
விவசாயத் துறையினர்: செவ்வாய், ராகு, சனி பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் அனுகூலமாக இல்லை! ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, இம்மூன்று கிரகங்களுக்கும், விவசாயத் துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால், உழைக்கும் அளவிற்கு விளைச்சல் கிடைப்பது மிகவும் கடினம். பழைய கடன்களினாலும் கவலை ஏற்படும். சந்தையிலும் எதிர்பார்க்கும் அளவிற்கு உங்கள் சரக்குகளுக்கு விலை கிடைக்காது.
பெண்மணிகள்: குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது, மிகவும் சிரமமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களின் மனப்போக்கு, வேதனையை அளிக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு வரன் அமைவதில் பிரச்னைகள் ஏற்படும். வேலை பார்க்கும் வனிதையருக்கு, மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை ஏற்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் பெண்களுக்கு, மனதிற்கு திருப்தியளிக்காத நிறுவனத்தில் சுமாரான வேலை கிடைக்கும்.
அறிவுரை: மிகவும் சிக்கனமாக செலவு செய்வது அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், செலவுகளைச் சமாளிப்பதற்காக, கடன் வாங்குவதும் கூடாது! ஏனெனில், இத்தகைய கிரக அமைப்பு ஏற்பட்டிருக்கும்போது, வாங்கும் கடன் வளரும் என பண்டைய ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் தீபமேற்றிவைத்து, தரிசித்து வருவது மிகச் சிறந்த பரிகாரமாகும்.
அனுகூல தினங்கள் ஆடி: 1-4, 8-10, 13-15, 19, 23-25, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள் ஆடி: 5 காலை முதல், 7 பிற்பகல் வரை.