17-7-2024 முதல் 16-8-2024 வரை
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: சூரியன், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூவரைத் தவிர, மற்ற கிரகங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர், இம்மாதம் முழுவதும்! தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால், வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். சுக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால், குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி நிறைந்ததாக உள்ளது, 6-ல் கேது, பழைய கடன்கள் இருப்பின் அவற்றை அடைத்து, நிம்மதி பெற உதவுவார். லாப ஸ்தானத்தில் திகழும் சனி பகவான், எதிர்பாராத பண வரவிற்கும் வழிவகுத்தருள்கிறார். சுருக்கமாகக் கூறுவேண்டுமாகில், மகிழ்ச்சியும், மன நிறைவும் குறைவின்றி உள்ள மாதம் இது என கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். துணிவும், நம்பிக்கையும் மேலிடும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான தீர்ப்பு கிடைக்கும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும். உடன் பிறந்தோர் நன்மை பெறுவர்.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மேலதிகாரிகள் சுமுகமாக நடந்துகொள்வார்கள். வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால், பேச்சிலும், செயலிலும் திறமை பளிச்சிடும். சிலருக்கு இடமாற்றமும், அதே தருணத்தில் பதவியுயர்வும் ஏற்படும். விரய ஸ்தானத்தில் ராகு இருப்பதால், வேலையில் கடுமையான உழைப்பு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, மனத்திற்குப் பிடித்தமான நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
தொழில், வியாபாரம்: லாபகரமான மாதம் இது என்பதை கிரக நிலைகள் உறுதியாகச் சுட்டிக்காட்டுகின்றன. குரு, சனிபகவான் ஆகிய இருவரின் சுப பலன் காரணமாக, சந்தையின் நிலவரம் மிகவும் சாதகமாக இருக்கும் இம்மாதம் முழுவதும்! எதிர்பார்ப்பை விடச் சற்று அதிகமாகவே சரக்குகள் விற்பனையாகும். தனாதிபதி சுக்கிரன் பலமாக உள்ள இம்மாதத்தில், பக்கியாதிபதியான குரு பகவானின் தன ஸ்தானமாகிய ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால், போட்டிகளை வெற்றிகரமாக முறியடித்து, லாபம் காண்பதை உறுதி செய்கின்றன, கிரக நிலைகள்! புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதற்கும் ஏற்ற மாதம் இந்த ஆடி!! ஏற்றுமதித் துறையினருக்கு, புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும், சில்லரை விற்பனையாளர்கள்கூட, நல்ல லாபம் பெறுவார்கள்.
கலைத் துறையினர்: சம்பந்தப்பட்ட கிரகங்கள் அனைத்தும் சுப பலம் பெற்று வலம் வருகின்றன. நாடகம், சிற்பம், நடனம், நாயனம் ஆகிய துறை அன்பர்களுக்கு, வருமானம் உயரும். வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆசிரியர்கள், பத்திரிகை துறையினர் ஆகியோரும் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். பரத நாட்டியக் கலைஞர்களும், கர்நாடக இசை வல்லநர்களுக்கும் வெளிநாடுகளுக்குச் சென்று-வரும் வாய்ப்புகள் கிட்டும். சுற்றுலாத் துறையினருக்கு, லாபம் உயரும். அறநிலையத் துறையினருக்கு, வாய்ப்புகள் கிட்டும்.
அரசியல் துறையினர்: புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும். மனதில் ஏற்பட்டிருந்த அச்சம், குழப்பம் ஆகி்யவை நீங்கும். உள்ளத்தில் துணிவு பிறக்கும். சிலருக்கு, கட்சி மாற்றமும், அதன் மூலம் நன்மைகளும் கிட்டும். வழக்குகள் இருப்பின், அவற்றிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள்.
மாணவ – மாணவியர்: கல்வியில் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம், புதன் சாதகமாக சஞ்சரிப்பதால், நினைவாற்றல் அதிகரிக்கும். இடையூறுகள் விலகும். நற்குணங்கள் அமைந்த மாணவ – மாணவியரின் நட்பு கிடைக்கும். நல்ல செய்திகள் தேடி வரும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வீர்கள். உயர் கல்விக்கு உங்கள் விருப்பம்போல், நல்ல கல்லூரியில் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவும், வழிகாட்டுதல்களும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
விவசாயத் துறையினர்: சூரியன், செவ்வாய் ஆகிய இரு கிரகங்களுமே அனுகூலமாக இல்லை. ஆதலால், பாடுபடும் அளவிற்கு விளைச்சல் கிடைப்பது சற்று கடினமே! விரய ஸ்தானத்தில் ராகு நிலைகொண்டிருப்பதால், கால் நடைகளின் பராமரிப்புகளிலும், விவசாயத்திலும் பணம் விரயமாகும். எந்தச் செலவையும் தவிர்க்க இயலாது.
பெண்மணிகள்: முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். திருமண வயதிலுள்ள பெண்களுக்கு நல்ல வரன் அமையும். வேலை பார்க்கும் பெண்களுக்கு, நிம்மதியான சூழ்நிலை நிலவும், அலுவலகத்தில்!!
அறிவுரை: விரய ஸ்தானத்திலுள்ள ராகுவினால், பணம் அதிகமாக செலவழியும். சிக்கனமாக இருக்க முயற்சியுங்கள். 2. உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உதவ புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டாம். சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம்.
பரிகாரம்: செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் தீபமேற்றி வந்தால் போதும். தன்னிகரற்ற பரிகாரம் இது என்பதை “பரிகார ரத்தினம்” என்றும் புராதன நூல் விளக்கியுள்ளது.
2. திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கோடகநல்லுார் (திருநெல்வேலி அருகில்) தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
3.தினமும் பித்ருக்களை மனதளவில் பூஜித்து, சிறிது எள், நெய் கலந்த சாத உருண்டையை காகத்திற்கு வைத்தல் மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.
அனுகூல தினங்கள் ஆடி: 3-5, 9-11, 16-18, 23-26, 31.
சந்திராஷ்டம தினங்கள் ஆடி: 1, 2 பின்னிரவு வரை மீண்டும் 27 இரவு முதல் 30 காலை வரை.