17-7-2024 முதல் 16-8-2024 வரை
(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
குடும்பம்: செவ்வாய் மற்றும் ராகு ஆகிய இருவரைத் தவிர, மற்ற அனைவரும் உங்களுக்குச் சாதகமாக, சுப பலம் பெற்றுள்ளன, இம்மாதம் முழுவதும்! ஜென்ம ராசியில் கேது அமர்ந்திருப்பதால், மனதில் ஆன்மிகச் சிந்தனைகள் அதிகரிக்கும். பாடல் பெற்ற திருத்தலங்கள் தரிசனங்கள் கிட்டும். நிதி நிலைமை திருப்திகரமாக உள்ளது. குடும்பத்தில், வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குருவும், லாப ஸ்தானத்தில் சுக்கிரனும் வலம் வருவதால், புதிய ஆடை – ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிச்சய தார்த்தம், திருமணம், சீமந்தம், புத்திர பாக்கியம், போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குக் குறைவிராது. சுபச் செலவுகள் இருப்பினும், சமாளிப்பதில் பிரச்னை ஏதும் இராது. சிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றம் செய்யும் வாய்ப்பு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் பலனளிக்கும். சனி பகவான் அனுகூலமாக இருப்பதாலும், லாப ஸ்தானமாகிய கடக ராசியில், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் பலருக்குக் கிடைக்கும்.
உத்தியோகம்: இந்த ஆண்டின் சிறந்த மாதங்களில் இந்த ஆடியும் ஒன்று என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன! ராகு மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களைத் தவிர, மற்ற அனைத்து கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். குடும்பத்தில், மகிழ்ச்சிக்கும், மன நிறைவிற்கும் குறைவிராது!! தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: பெரும்பாலான கிரகங்கள் சுப பலம் பெற்றுச் சஞ்சரிப்பதால், லாபகரமான மாதமாகும், இந்த ஆடி! உற்பத்தியையும், விற்பனை நிலையங்களையும் அதிகரிப்பதற்கு ஏற்ற தருணம் இதுவே!! சந்ைத நிலவரம், சாதகமாக உள்ளது. லாப ஸ்தானத்தில் சூரியன் நிலைகொண்டிருப்பதால், நிதி நிறுவனங்களின் உதவி எளிதில் கிட்டும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து புதிய தொடர்புகள் கிடைக்கும். அதன் மூலம் ஏற்றுமதி அதிகரிக்கும். லாபம் உயரும். வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுடன் புதிய வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஒரு சிலர் வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் உருவாகும்.
கலைத் துறையினர்: கலைத் துறைக்குச் சம்பந்தப்பட்ட அனைத்து கிரகங்களும், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். மக்களிடையே செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய படங்களைத் தயாரிக்கலாம். லாபம் கிட்டும். அரசாங்க ஆதரவும், உதவியும் கைகொடுக்கும். பாடகர்கள், நாட்டியக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோர் வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உருவாகும். சிலருக்கு, புதிய வாகன யோகமும் அமைந்துள்ளது.
அரசியல் துறையினர்: கிரக நிலைகள் உங்களுக்கு மிகவும் ஆதரவாக அமைந்துள்ள, இம்மாதம் முழுவதும்! மக்களிடையேயும், கட்சியிலும் ஆதரவு அதிகரிக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், அரசாங்கப் பதவியொன்று கிடைப்பதற்கும் அனுகூலமான மாதம் இந்த ஆடி!!
மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதியான புதன், இம்மாதம் முழுவதும் அனுகூலமாகவே வலம் வருவதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில், நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் திகழ ஏற்ற மாதம் இது! நேர்முகத் தேர்வுகள் இருப்பின், ெவற்றி நிச்சயம்!! சிலருக்கு, உயர் கல்விக்கு நிதியுதவி கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை, புதன் மற்றும் சுக்கிரனின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: செவ்வாய், அனுகூலமாக இல்லை, இம்மாதம் முழுவதும்! இருப்பினும், மற்ற கிரக நிலைகள் மிகவும் சாதகமாக அமர்ந்துள்ளனர். வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். அடிப்படை வசதிகள் குறைவின்றிக் கிடைக்கும். விளைச்சலும், உழைப்பிற்கேற்றபடிஇருக்கும், ஆயினும், சந்தை நிலவரம் மட்டும்உங்களுக்குச் சாதகமாக இராது!! உங்கள் விளைபொருட்களுக்கு, எதிர்பார்த்திருக்கும் விலை கிடைப்பது சற்று கடினம் என்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. கடும் போட்டிகளை நீங்கள் சமாளிக்க நேரிடும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாக்கும், குரு மற்றும் சுக்கிரன் ஆகியோர் சிறந்த சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் வாரி வழங்கக்கூடிய மாதம் இது, பெண்மணிகளுக்கு! மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு நல்ல வரனை அமைத்துக் கொடுப்பார்கள் குருவும், சுக்கிரனும்!!
அறிவுரை: கிரகங்கள் கொடுப்பதை வீண் விரயம் செய்துவிட வேண்டாம். எதிர்காலத்திற்கென்று சிறிது சேமித்துவைத்துக் கொள்ளுங்கள். சப்தம ஸ்தானத்தில் ராகு பலத்துடன் அமர்ந்திருப்பதால், திருமண மான பெண்மணிகள் உடல் நலனில் கவனமாக இருத்தல் அவசியம்.
பரிகாரம்: வெள்ளிக் கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் நெய் தீபமொன்று ஏற்றி வரவும்.சக்திவாய்ந்த, சூட்சுமப் பரிகாரமாகும்.
அனுகூல தினங்கள் ஆடி: 4-9, 14-16, 20-22, 26-28, 31.
சந்திராஷ்டம தினங்கள் ஆடி: 11 மாலை முதல், 13 இரவு வரை.