கன்னி

14-4-2024 முதல் 13-5-2024 வரை

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: சனி, செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் மாத ஆரம்பத்திலிருந்தே, உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளனர்! சித்திரை 12-ம் தேதியன்றிலிருந்து சுக்கிரனால், நன்மைகளைப் பெறலாம். சித்திரை 18-ல் குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறி, ஜென்ம ராசியை, தனது சுபப் பார்வையினால், பலப்படுத்துகிறார்!! மாதம் முழுவதும், வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணத் தட்டுப்பாடு இராது. வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். மீன ராசியில், ராகு நிலைகொண்டிருப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல், நல்லது. ஜென்ம ராசியில் கேது நிலைகொண்டிருப்பதால், மனம் ஆன்மிகத்தில் தீவிரமாக ஈடுபடும். தீர்த்த – தல யாத்திரை ஒன்றிற்கும் செல்ல சாத்தியக்கூறு உள்ளது. குரு பலத்தினால், விவாக முயற்சிகளில் வெற்றி கிட்டும். அஷ்டம ராசியில் சூரிய பகவானின் சஞ்சாரத்தினால், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் மற்றும் சரும பாதிப்புகள் ஏற்பட்டு எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும். உறவினர்களிடையே சுமூகமான உறவு நிலவும்.

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான் சுப பலம் பெற்று, உங்களுக்கு ஆதரவாகச் சஞ்சரிப்பதால், அலுவலகச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். சக – ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், சிறு பதவியுயர்வு ஒன்றையும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு, வெளிநாடு செல்லும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் சுட்டிக் காட்டுகின்றன.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையினருக்கு, முதல் இரண்டு வாரங்களைவிட, மூன்று மற்றும் நான்காவது வாரங்களில் லாபம் பல மடங்கு உயரும். சந்தையில் போட்டிகள் குறையும். நிதிநிறுவனங்கள் முன்வந்து உதவுவார்கள். உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏற்ற மாதம், இந்தச் சித்திரை!! புது விற்பனைக் கிளைகள் ஆரம்பிப்பதற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன. ஏற்றுமதித் துறை அன்பர்களுக்கு, வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களிலிருந்து புதிய ஆர்டர்கள் கிடைக்கும். சப்ளை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய துறைகளில் காலடி பதிப்பதற்கு, ஏற்ற மாதம் இந்தச் சித்திரை!! சிலருக்கு, வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இம்மாத கிரக நிைலகள் வியாபாரத் துறையினருக்கு அரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவுள்ளன. பயன்படுத்திக்கொள்வது உங்கள் திறனில் உள்ளது.

கலைத் துறையினர்: சித்திரை 11-ம் தேதி வரை அதிக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது! 12-ம் தேதியிலிருந்து, சுக்கிரன் சுப-பலம் பெறுவதால், புதிய வாய்ப்புகள் அதிக முயற்சியின்றித் தேடி வரும். குறிப்பாக, திரைப்படத் துறையினருக்கு, மாதத்தின் பிற்பகுதி லாபகரமாக இருக்கும். மீண்டும் வருமானம் வரத் தொடங்கும். சென்ற சுமார், இரண்டரை வருடங்களுக்கு மேலாக, மிகக் கடுமையான பாதிப்பிற்கு உள்ளான அன்பர்கள், கலைத் துறையைச் சேர்ந்தவர்களே! அதிலும் குறிப்பாக, திரைப்படத் துறையினராவர்!! ஏராளமான நடிகர்கள், நடிகைகள், துணை நடிக-நடிகைகள், கீழ்மட்ட ஊழியர்கள், இயக்குநர்கள், புகைப்பட நிபுணர்கள், விநியோகஸ்தர்கள் என ஏராளமான அன்பர்கள், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, அனைவரும் அறிந்ததே! அந்நிலை, இம்மாதத்திலிருந்து அடியோடு மாறவுள்ளது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இதனை இம்மாதத்தில் அனுபவத்தில் காண முடியும்.

அரசியல்துறையினர்: முதல் இரண்டு வாரங்கள் கிரக நிலைகள் சாதகமாக இல்லை!! பேச்சிலும், செயலிலும், உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருத்தல் மிகவும் அவசியம். மேலும், மேல்மட்டத் தலைவர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை வேண்டும். அவசியமானால் தவிர, அவர்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். மிக முக்கியமான தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், எவர், எவரை சந்தேகிக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. உங்களது சிறு செயலையும், மேலிடத் தலைவர்கள் உன்னிப்பாக, உங்களுக்கே தெரியாமல் கண்காணித்து வருவதை, செவ்வாய், ராகு மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சஞ்சார நிலைகளும் வெளிப்படுத்துகின்றன.

மாணவ – மாணவியர்: சென்ற மாதம் போலல்லாமல், இப்போது கிரக நிலைகள் மிகவும் சாதகமாக மாறியுள்ளன. படிப்பில் ஆர்வம் மிகும். தேர்வுகளில் சரியான விடையளித்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு அனுகூலமாக வித்யா காரகரான புதனின் சஞ்சார நிலை அமைந்துள்ளது.

விவசாயத் துறையினர்: செவ்வாய் – சனி இணைந்திருப்பது, இந்தச் சித்திரை யோக பலன்களை உங்களுக்குச் சற்று தாராளமாகவே அளிக்கவிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இம்மாதத்தில்தான், தமிழ்ப் புத்தாண்டும், பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் மேகாதிபதியும், அர்க்காதிபதியும் சனி பகவான்தான்! ஆதலால், தண்ணீர்ப் பஞ்சம் சிறிதளவும் இராது. பலருக்கு, நவீன விவசாய வசதிகள் குறைவில்லாமல் கிட்டும்.

பெண்மணிகள்: குரு பகவான், சித்திரை 18-ம் தேதி பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். சித்திரை 12-லிருந்து, சுக்கிரனும் ஆதரவாக மாறுகிறார். சனி பகவானும், செவ்வாயும், ஏற்கெனவே சுப பலம் பெற்று விளங்குகின்றன. ஆகையால், சென்றமாதம் உங்களுக்கு எற்பட்ட பல பிரச்னைகள் நல்லபடி தீரும். மனம் அமைதியடையும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகத்தையளிக்கும்.

அறிவுரை: வீண் அலைச்சலையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்த்துவிடுங்கள்.

பரிகாரம்: ராகுவிற்கு மட்டும், பரிகாரம் செய்தால் போதும். காள ஹஸ்தி, திருநாகேஸ்வர திருத்தல தரிசனம் உகந்த பரிகாரமாகும்.
2. தினமும் 1008 முறை ராம நாமம் எழுதி வந்தால் மகத்தான புண்ணிய பலனையும், சிறந்த பரிகாரமாகவும் அமைந்துவிடும்.
3. பசுவிற்கு, பசும் புல்லும், காகத்திற்கு எள், நெய், பருப்பு கலந்த சாத உருண்டை அளிப்பது சிறந்த பரிகாரமாகும்.
4. சர்வ ரோக நிவாரணி எனப் போற்றப்படும் மத் சுந்தர காண்டத்தை தினமும் ஒரு சர்க்கமாவது படித்து வந்தால் போதும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 1, 2, 6, 7, 13-15, 19-22, 26-29.

சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 23 மாலை முதல், 25 இரவு வரை.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us