15-5-2023 முதல் 15-6-2023 வரை
பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை
குடும்பம்:
குரு, சுக்கிரன், புதன் மற்றும் சூரியன் ஆகிய நால்வரும் அனுகூல நிலைகளில் அமர்ந்துள்ளனர். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். தன ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால், வரவிற்கேற்ற செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும். விவாக முயற்சிகளில் நல்ல வரன் அமையும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் நிலவும். பல பெண்மணிகளுக்கு, கருத்தரிக்கும் யோகமும் உள்ளது. வெளியூர்ப் பயணங்களினால், அனுகூலம் உண்டு. ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். மனைவியின் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டு, தக்க சிகிச்சையினால் குணம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், நீடிக்கும். வரவேண்டிய பாக்கிகள் ஏமாற்றத்தையளிக்கும். வெளியூர்ப் பயணங்களினால், நன்மைகள் கிட்டும்.
உத்தியோகம்:
ஏழரைச் சனியின் ஆரம்பப் பகுதியில் இருப்பதால், அலுவலகச் சூழ்நிலை திருப்திகரமாக இராது. மேலதிகாரிகளின் மனப்போக்கும், சக ஊழியர்களின் மறைமுகப் பேச்சுகளும் மனதில் அதைரியத்தை ஏற்படுத்தும். அன்றாடக் கடமைகளில் மனத்தைச் செலுத்துவது சற்று சிரமமாகவே இருக்கும். பொறுமை, நிதானம் மிகவும் அவசியம். சக ஊழியர்களின் நியாயமற்ற பேச்சுக்களினால், உணர்ச்சிவசப்படவேண்டாம். உங்கள் பணிகளில் கவனமாக இருந்தால் போதும். நியாயமாக உங்களுக்கு அளிக்கப்படவேண்டிய சலுகைகள், ஊதிய உயர்வு ஆகியவை மறுக்கப்படும். ஒருசிலருக்கு, இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மறுக்காமல் ஏற்றுக்கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. புதிதாக வேலைக்கு முயற்சிக்கும் மீன ராசியினருக்கு, மனதிற்கு திருப்தியளிக்காத பணி கிடைக்கும்.
தொழில், வியாபாரம்:
இம்மாத கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. நியாயமற்ற, கடினமான போட்டிகளை நீங்கள் சமாளிக்கவேண்டிவரும். உற்பத்தியாளர்களுக்கு, சரக்குகள் தங்கிப்போகும். ஏற்றுமதித் துறையினருக்கு, “தரக்குறைவாக உள்ளன!” -என்ற முத்திரையிட்டு, சரக்குகள் திருப்பியனுப்பப்படும். இதனால், நஷ்டம் உண்டாகும். மேஷத்தில், ராகு அமர்ந்திருப்பதால், சகக் கூட்டாளிகளினால் பிரச்னைகள் ஏற்பட்டு, மன அமைதி பாதிக்கப்படும். முன்பணமின்றி, அனுப்பப்பட்ட சரக்குகளுக்கு வரவேண்டிய பணம் தாமதமாகும். வங்கி போன்ற நிதிநிறுனங்களினாலும் பிரச்னைகள் உண்டாகும்.
கலைத்துறையினர்:
கலைத்துறைக்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், ஓரளவு நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். இருப்பினும், இம்மாதம் முழுவதும், நிதிப் பற்றாக்குறை சற்று கடினமாகவே இருக்கும். புதிய முயற்சிகளில், ஆர்வம் இருப்பினும், துணிவுடன் அவற்றில் இறங்க முடியாது. திரைப்படத் துறையினர், உள்ளதை வைத்துக்கொண்டு, சமாளிக்க வேண்டிய மாதமிது. புதிய தயாரிப்புகள், நஷ்டத்தில் கொண்டுவிடும். கடன் வாங்கினால், அது வளரும்!
அரசியல் துறையினர்:
சுக்கிரன் சாதகமாக இருப்பதால், ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம். பெரும்பான்மையான மற்ற கிரகங்கள், சாதகமாக இல்லை. ஆதலால், கட்சியில் தொண்டர்களிடையே அதிருப்தி நிலவும். அவர்களின் மறைமுகப் பேச்சுகள் மனத்திற்கு வேதனையை அளிக்கும். மேல்மட்டத் தலைவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள்.
மாணவ – மாணவியர்:
கல்வித் துறைக்கு அதிபதியான புதன் அனுகூலமான நிலையில் வலம் வருவதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். தேர்வுகளில் உங்களுக்குக் கிடைக்கும் மதிப்பெண்கள் இதனை நிரூபிக்கும். கிரகிப்பு சக்தியும், நினைவாற்றலும் அதிகரிக்கும்.
விவசாயத் துறையினர்:
விளைச்சல், எதிர்பார்க்கும் அளவிற்கு இராது. அதனால், லாபமும் சற்று குறையும். கால்நடைகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். மாதக் கடைசியில் ஆடு, மாடுகள் நோய்வாய்ப்படும். அதன் காரணமாக, மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். என்றோ பட்ட கடன்களினால், இப்போது பிரச்னை ஏற்பட்டு கவலையை அளிக்கும்.
பெண்மணிகள்:
குரு, சுக்கிரன் பெண்மணிகளின் நலன்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன. இருப்பினும், சனி பகவானின் சஞ்சார நிலையினால், உடல் நலன் பாதிக்கப்படக்கூடும். கூடியவரையில் அதிக உழைப்பையும், சரீரத்தின் உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடிய குளிர்ப்பானங்கள், கனிகள், ஐஸ்கிரீம் ஆகியவற்றைத் தவிர்ப்பதும் அவசியம். திருமண வயதில் உள்ள கன்னியருக்கு, வரன் அமைவதில் சிறிய தடங்கல் ஏற்பட்டு, அதன்பின்பு, நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சிக்கும் பெண்மணிகளுக்கு, வெற்றி கிடைப்பது தாமதமாகும்.
அறிவுரை:
ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். ஏழரைச் சனிக் காலம் ஆரம்பித்துள்ளதை மறந்துவிடவேண்டாம். வெளியூர்ப் பயணங்களின்போது, உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
பரிகாரம்:
சூரியனார் கோயில், திருநாகேஸ்வரம், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ஆகிய திருத்தலங்களில் ஏதாவது ஒன்றையாவது தரிசித்துவிட்டு வருவது மிகச் சிறந்த பரிகாரமாகும். எள் எண்ணெய் தீபம் ஏற்றிவைக்க மறந்துவிடாதீர்கள்! சனிக்கிழமைகளில், உபவாசம் இருப்பதும், நல்ல பரிகாரமாகும். அவசியமானால், இரவில் பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.
அனுகூல தினங்கள்:
வைகாசி: 1, 2, 3, 10, 14-16, 20-24, 28-30.
சந்திராஷ்டம தினங்கள்:
17 மாலை முதல், 19 இரவு வரை.