17-7-2024 முதல் 16-8-2024 வரை
(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
குடும்பம்: ஏழரைச் சனியின் ஜென்மச் சனி காலகட்டத்தில் நீங்கள் இருந்தாலும், கும்பம் சனி பகவானின் ஆட்சி வீடாக அமைந்திருப்பதால், சிரமங்கள் அளவோடு இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். கற்பனையான கவலைகள் மனதை அரிக்கும். நெருங்கிய உறவினர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்பட்டு, ஒற்றுமை பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில், தடங்கல்கள் உண்டாகும். அல்லது, தவறான வரனை நிச்சயித்துவிடக்கூடும். வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். அடிக்கடி ஏதாவதொரு சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சை மூலம் குணம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், நீடிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக அலைச்சலும், கவலையும் மேலிடும். மன நிம்மதி குறையும்.
உத்தியோகம்: உங்கள் அன்றாடப் பணிகளில், கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். மேலதிகாரிகளின் கண்டிப்பு காரணமாக, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் மேலிடும். உங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு, தாமதப்படும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் கும்ப ராசியினருக்கு, வெற்றி ஏற்படுவது கடினம். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் கும்ப ராசியினருக்கு, வேலை பார்க்கும் இடத்தில், சக-ஊழியர்களினால், பிரச்னைகள் ஏற்படும். தற்காலிகப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரம் ஆவதில், தடங்கல்கள் உண்டாகும். சக-ஊழியர்களுடன் பிரச்னைகள் ஏற்படும். மேலதிகாரிகள், உங்களைக் கண்டாலே முகம் சுளிப்பார்கள்!
தொழில், வியாபாரம்: முன்பணம் இல்லாமல், சரக்குகள் அனுப்புவதைக் கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டும். லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள மிகவும் பாடுபடவேண்டியிருக்கும். நிதி நிறுவனங்களின் உதவி கிடைப்பதில், தடங்கல்கள் உண்டாகும். சந்தை நிலவரம் திடீரென்று மாறுவதால், விற்பனையும், லாபமும் பாதிக்கப்படும். தொழிலாளர் பிரச்னை தலைதூக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் ஏமாற்றமே மிஞ்சும்.
கலைத் துறையினர்: கலைத் துறைக்குச் சம்பந்தப்பட்ட கிரகங்கள், இம்மாதம் அனுகூலமாக இல்லை! எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள், ஏமாற்றத்தை அளிக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். சில தருணங்களில், புதிய கடன்களை ஏற்கவேண்டிய கட்டாயம் உருவாகும். வசதிகளைக் குறைத்துக் கொண்டாவது, கடன் வாங்குவதைத் தவிர்ப்பது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். திரைப்படத் துறையினர், மேலும் சிறிது காலத்திற்கு பின்னடைவையே ஏற்க வேண்டியுள்ளது.
அரசியல் துறையினர்: ஜென்மச் சனி கால கட்டத்தில் உள்ள உங்களுக்கு, குரு மற்றும் சுக்கிரனும் அனுகூலமாக இல்லை, இந்த ஆடி மாதத்தில்! கட்சியில் செல்வாக்கு குறையும். மேல்மட்டத் தலைவர்கள், உங்களைப் புறக்கணிக்கக் கூடும். எந்நிலையிலும், உணர்ச்சிவசப்படாமல், நிலைமையைச் சமாளிப்பது நல்லது. ஒரு சிலர் கட்சியை விட்டு விலக நேரிடும். அடுத்துவரும் பல மாதங்களுக்கு, மேடைப் பேச்சுக்களையும் தவிர்த்தல் நல்லது. அவசர முடிவுகள், உங்கள் எதிர்கால நலனைக் கடுமையாகப் பாதிக்கும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.
மாணவ – மாணவியர்: ஏழரைச் சனிக் காலத்தில், ஜென்மச் சனி நடைபெறுவதால், உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். தவறான பழக்க வழக்கங்கள் உள்ள சக மாணவர்களுடன் பழகாமலிருத்தல் மிகவும் அவசியம். நீங்களுண்டு, உங்கள் படிப்புண்டு என்றிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மையை அளிக்கும். கட்டுப்பாடான பழக்க வழக்கங்கள் உதவும். பாடுபட்டுப் படித்தால்தான், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
விவசாயத் துறையினர்: இம்மாதம் முழுவதும் செவ்வாய், சுக்கிரன், சனி மற்றும் ராகு ஆகிய வீரியம் நிறைந்த கிரகங்கள் அனுகூலமாக இல்லை! வயலில் உழைப்பு கடுமையானதாக இருக்கும். உழைக்கும் அளவிற்கு விளைச்சல் கிடைப்பது மிகவும் கடினம். அடிக்கடி ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால், வயல் பணிகளுக்குச் செல்வதும் பாதிக்கப்படும். கால்நடைகளின் பராமரிப்பில், செலவுகள் அதிகரித்து, புதிய கடன்களை ஏற்க நேரிடும்.
பெண்மணிகள்: ஜென்மச் சனி காரணமாக, குடும்பக் கவலைகள், உடலில் அசதி, உபாதைகள், நெருங்கிய உறவினர்களுடன் பகையுணர்ச்சி ஆகியவை ஏற்படக்கூடும். விவாகமான பெண்மணிகளுக்கு, கணவருடன் உள்ள ஒற்றுமை சற்று பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பிறருடன் பழகுவதில், விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது, நல்லது. வேலைக்குச் சென்றுவரும் வனிதையர், அன்றாடக் கடமைகளில் கவனமாக இருத்தல் அவசியம். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமைவதில் தாமதமும், தடங்கல்களும் ஏற்படும். பரிகாரம் உதவும்.
அறிவுரை: சொல்லிலும், செயலிலும் நிதானம் வேண்டும். பொறுமை, சாதுர்யம் அவசியம். முன்கோபம் கண்டிப்பாகக் கூடாது.
பரிகாரம்: திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, திருவேங்கடம் தரிசனம் உங்களைக் கவசமெனப் பாதுகாக்கும். இயலாதவர்கள், சனிக்கிழமைகளில் மட்டும் தங்கள் வீட்டின் பூஜையறையில், மாலையில் இரண்டு மண் அகல்களில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் போதும். சக்திவாய்ந்த பரிகாரமாகும்.
அனுகூல தினங்கள் ஆடி: 1-4, 10-12, 16-18, 20-22, 26-29.
சந்திராஷ்டம தினங்கள் ஆடி: 23 முதல், 25 மாலை வரை.