14-4-2024 முதல் 13-5-2024 வரை
(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
குடும்பம்: சூரியன், சுக்கிரன், புதன் மூவரும் உங்களுக்கு ஆதரவாக, இம்மாதம் முழுவதும் சஞ்சரிக்கின்றனர். வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணத் தட்டுப்பாடு இராது. அதே தருணத்தில், செலவினங்களும் அதிகமாக இருப்பதால், சேமிப்பிற்கு இடமிருக்காது. ெஜன்ம ராசியில், சனி – செவ்வாய் அமர்ந்திருப்பதாலும், தன ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும், மருத்துவச் செலவுகள் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான பிணிகள் உடலை வருத்தும். உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள், காய் – கனிகள் ஆகியவற்றைத் தவிர்த்தல் முக்கியம். அவசியமில்லாமல், வெயிலில் வெளிச் செல்வதைக் குறைத்துக் கொள்ளவும். கூடியவரையில், வெளியூர்ப் பயணங்களையும் இம்மாதம் தவிர்ப்பது ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக்கொள்ள உதவிகரமாக இருக்கும். இத்தகைய கிரக நிலைகள் அமைந்திருக்கும் சமயத்தில், பிறருக்கு உதவ, கடன் கொடுத்தால், திரும்பி வராது எனக் கூறுகிறது ஜோதிடக் கலை! குரு பகவானும், அனுகூலமாக இல்லாததால், நெருங்கிய உறவினர்களுடன் சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தன ஸ்தானத்தில் ராகு பலமாக நிலைகொண்டிருப்பதால், வீண் கவலைகள் சற்று அதிகமாகவே இருக்கும். சில தருணங்களில், கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படக்கூடும். சற்று கண்டிப்பாக இருப்பின், தவிர்க்கலாம். திருமண முயற்சிகளை ஒத்திப் போடுவது நல்லது. ஏனெனில், சரியாக விசாரிக்காமல், தவறான வரன்களை நிச்சயித்துவிட சாத்தியக்கூறு உள்ளது.
உத்தியோகம்: ஏழரைச் சனியில், ஜென்மச் சனியின்பிடியில் இப்போது நீங்கள் இருப்பதை கிரக நிலைகள் எடுத்துகாட்டுகின்றன. வேலை பார்க்குமிடத்தில், தானுண்டு; தன் வேலையுண்டு என்றிருப்பது, மிகவும் அவசியம். பிறர் செய்யும் தவறுகளுக்கு, நீங்கள் காரணம் என்ற அவப்பெயர் ஏற்படக்கூடும். மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. நிர்வாகத்தினரின் குறைகளைப் பற்றி, சக ஊழியர்களுடன் விவாதிக்க வேண்டாம். இயந்திரங்களில், பணி புரியும் ஊழியர்கள், அதி-ஜாக்கிரதையாகவும், விழிப்புணர்வுடனும், பாதுகபாப்பு விதி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தும் செயல்படுவது அவசியம். ஏனெனில், ஜென்மச் சனியின் தோஷத்தினால், ஆபத்துகள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.
தொழில், வியாபாரம்: தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டிய மாதமிது! உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களின் விலை விஷம் ஏறுவதுபோல் உயர்வதால், உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது நல்லது. தொழிலாளர்கள் பிரச்னை ஒருபுறமும், நிதி நிறுவனங்களின் நெருக்கடி மறுபுறமும் என, உங்கள் பொறுமைக்கு சோதனையான மாதமாகும், இந்தச் சித்திரை!! சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வரவேண்டிய மாதமிது. சில்லரை வர்த்தகர்கள், கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பதை, செவ்வாய், சனி இணைந்திருப்பது எடுத்துக்காட்டுகின்றது. ஜோதிடக் கலையின் விதிகளின்படி, ஜென்மச் சனிக் காலத்தில், செவ்வாயின் சேர்க்கை ஏற்படும்போது, வாங்கும்கடன் வளரும் எனவும் அதனைத் தீர்ப்பது பிற்காலத்தில் மிகவும் கடினம் எனவும், மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தங்கள் கூறுகின்றன. “கடன் கொண்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்…!” எனக் கூறுகிறார் கவிச்சக்கரவர்த்தி, கம்பனும், தனது ராமாயண மகா காவியத்தில், ராவணன் மரணத்தின் பிடியில் சிக்கிக் கொள்ள இருந்த விநாடிகளில்…!! கடன் என்பது எத்தகைய கொடிய விஷம் என்பதை “பூர்வஜென்ம நிர்ணய ஸாரம்” எனும் ஒப்புயர்வற்ற ஜோதிட நூல் கூறுகிறது. ஆதலால், தவிர்க்கவும்.
கலைத்துறையினர்: மாதம் முழுவதும், சுக்கிரன் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால், வருமானம் ஓரளவு கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. இருப்பினும், கடைசி இரண்டு வாரங்களில், பணத் தட்டுப்பாடு சற்று கடுமையாகவே இருக்கும். மாத ஆரம்பத்திலிருந்தே, திட்டமிட்டு செலவு செய்வது, மிகவும் நல்லது. சினிமாத் துறையினருக்கு, சற்று தாராளமாகவே செலவு செய்வது வழக்கமாகிவிட்டது. மனதில் வைராக்கியம் அவசியம். ஏழரைச் சனியின் ஜென்மச் சனிக்காலத்தில், சிக்கனமாக இருக்கவேண்டியது கட்டாயம் என்பதை மனத்தில் வைத்துக் கொண்டால், இத்தோஷ காலத்தை சுலபமாகக் கடந்துவிடலாம்.
அரசியல்துறையினர்: மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய தருணம் இது என்பதை ஜென்ம ராசியிலுள்ள சனியும், செவ்வாயும் உணர்த்துகின்றன. வாக்கு ஸ்தானத்தில், ராகு இருப்பதை மறந்துவிடவேண்டாம்! உணர்ச்சிவசப்பட்டு, பேசுவது, உங்களைப் பேராபத்தில் கொண்டுவிடக்கூடும். கண்ணியமான அரசியலுக்கு, வாக்கு கட்டுப்பாடு மிக, மிக அவசியம்.
மாணவ – மாணவியர்: மாதம் முழுவதும் கல்வித் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும், உங்களுக்குச் சாதகமாக நிலைகொண்டுள்ளனர். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஆசிரியர்களின் ஆதரவு மனதை நெகிழச் செய்யும். ஜெமச் சனி தோஷத்தினால், ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்க வேண்டாம்.
விவசாயத் துறையினர்: ஜென்ம ராசியில், செவ்வாயுடன், சனி சேர்ந்திருப்பதால், வயலில் உழைப்பு கடுமையாக இருக்கும். ஆயினும், உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் கிடைப்பதால், மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெறுவீர்கள்.
பெண்மணிகள்: உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். உடலில் அசதியும், சோர்வும் அதிகமாக இருக்கும். ஒருசிலருக்கு, மாதவிடாய்க் கோளாறுகள், மூட்டுவலி, கை கால் குடைச்சல் ஆகியவை வருத்தும். ஓய்வு அவசியம்.
அறிவுரை: தேவையற்ற, கற்பனையான கவலைகளை விட்டுவிடுங்கள்.
பரிகாரம்: செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தீபம் ஏற்றிவைத்துவிட்டு, தரிசித்துவிட்டு வரவும்.
அனுகூல தினங்கள்
சித்திரை: 1-4, 11-14, 19-21, 26-28, 30.
சந்திராஷ்டம தினங்கள்
சித்திரை: 7 இரவு முதல், 10 காலை வரை.