14-4-2024 முதல் 13-5-2024 வரை
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: ஏழரைச் சனியின் கடைசி பகுதியில் உள்ளதால், சனி பகவானால் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். புதன், சுக்கிரன், ராகு மூவரும் உங்களுக்குச் சாதகமாக வலம் வருகின்றனர். சித்திரை 18-ம் தேதியிலிருந்து, குரு பகவானும் அனுகூலமாக மாறுகிறார். வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணத் தட்டுப்பாடு இராது. எதிர்பாராத செலவுகள் ஏற்படினும், சமாளித்துவிடுவீர்கள். முயற்சிகளனைத்திலும், வெற்றி கிட்டும். சித்திரை 18-லிருந்து, உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திற்கு ரிஷபத்திற்கு குரு பகவான் மாறுவதால், குழந்தைகளின் படிப்பில், நல்ல முன்னேற்றம் ஏற்படுவது மகிழ்ச்சியை அளிக்கும். பாடல் பெற்ற திருத்தல தரிசனம் ஒன்று கிடைக்கும் யோகமும் அமைந்துள்ளது. திருமணமான பெண்கள், கருத்தரிப்பதற்கு கிரக நிலைகள் யோக பலம் பெற்றுள்ளன. விவாக வயதிலுள்ள பெண்களுக்கு, நல்ல வரன் அமையும். ஆரோக்கியத்திலும் நல்ல அபிவிருத்தியைக் காணலாம்.
உத்தியோகம்: சென்ற சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே ஏழரைச் சனியின் தாக்கத்தினால், அலுவலகப் பிரச்னைகளினால் மிகவும் வேதனைப்பட்டுவந்த உங்களுக்கு, நல்ல காலம் பிறக்கிறது, இப்போது! சிலருக்கு, நிறுவன மாற்றம்உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு, சிறிது முயற்சியிலேயே வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு, பணி நிரந்தரமாகும். உத்தியோகம் காரணமாக, பிரிந்திருந்த கணவர் – மனைவி மீண்டும் ஒன்றுசேர்வர். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிய ஆர்வமிருப்பின், இம்மாதத்தின் கடைசி வாரத்தில் முயற்சிக்கலாம். ெவற்றி தேடி வரும்.
தொழில், வியாபாரம்: தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு கிரக நிலைகள் மூன்றாம் வாரத்திலிருந்து அனுகூலமாக மாறுகின்றன. உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் அதிக தேவையும், நல்ல விலையும் கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து, புதிய ஆர்டர்கள் வரும். வரவேண்டிய பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன. புதிய தொழில் ஆரம்பிப்பதற்கு சாதகமான மாதம் இது. ஒரு சிலர் சொந்தக் கட்டடத்திற்கு மாற்றம் செய்வார்கள்.
கலைத்துறையினர்: பல மாதங்களுக்குப் பிறகு, இப்போதுதான் உங்களுக்கு நல்ல காலம் துளிர்க்கவுள்ளது எனக் கூறலாம்! மூன்றாம் வாரத்திலிருந்து மீண்டும் வருமானம் வரத் தொடங்கும். புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். வீட்டு வேலை செய்துவரும் வேலைக்காரர்களினால், ஏற்பட்டுவந்த தொல்லைகள் அடியோடு நீங்கும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன் உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளார். கட்சியில் ஆதரவு நீடிக்கிறது. வெற்றிக் கனியை எளிதில் பறித்துவிட, சுக்கிரன் – சனியின் நிலை சாதகமாக உள்ளது. செல்வாக்கு மிகுந்த பிரமுகரின் தொடர்பு, சமய சஞ்சீவியாக உங்களுக்கு இப்போது உதவும். வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறனில் உள்ளது. எப்போதெல்லாம் அரிய வாய்்ப்புகள் உருவாகின்றனவோ அப்போதெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டி உதவுகிறது, ஜோதிடக் கலை!!
மாணவ – மாணவியர்: கிரக நிலைகள் இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால், தேர்வுகளில் தன்னம்பிக்கையையும், ஆர்வமும் மேலிடும். நினைவாற்றல் சரியான விடையளிக்க துணைநிற்கும். வெளிநாடுகளில் விசேஷ கல்வி பயின்றுவரும் மாணவ – மாணவியர் குறித்த காலகட்டத்தில், தங்கள் பிராஜெக்ட்களை முடித்து, வெற்றிபெற அனுகூலமான மாதமிது!
விவசாயத் துறையினர்: ராசிக்கு தன ஸ்தானத்தில், சனி இருப்பதும், ஜென்மச் சனி தோஷம் விலகியுள்ளதும், இம்மாதம் உங்களுக்குப் பல நன்மைகள் ஏற்படவிருப்பதைச் சுட்டிகாட்டுகின்றன. உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் இருக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்கள் அடைபடும். ஒருசிலருக்கு சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது.
பெண்மணிகள்: சென்ற மாதம் செவ்வாய் தோஷத்தினால் ஏற்பட்டுவந்த உஷ்ண சம்பந்தமான உபாதைகள் இம்மாதம் நீங்கிவிடுவது, ஆரோக்கியத்தைத் திரும்பப்பெற உதவுகிறது! அடிக்கடி ஏற்பட்டுவந்த, சோர்வு, அசதி ஆகியவை இம்மாதம் இராது!! மீண்டும் உடலில் புத்துணர்ச்சி உண்டாகும். அதற்கேற்றாற்போல் ராகுவும் உதவிகரமாக அமைந்துள்ளார். குருவும், சித்திரை 18-ம் தேதி ரிஷப ராசிக்கு மாறுவது, மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய மிக முக்கிய கிரக மாறுதலாகும்.
அறிவுரை: முக்கிய கிரகங்கள் சாதகமான பாதைகளில் மாறிவருவதால், இம்மாதம் பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படவுள்ளன. வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பரிகாரம்: ஏழரைச் சனி அடியோடு நீங்கவில்லை. ஆதலால், பரிகாரம் செய்துகொள்வது, நன்மையளிக்கும். சனிக்கிழமைகளில் மட்டும், இரவில் உபவாசமிருத்தல் நல்ல பலனையளிக்கும். ஆரோக்கியக் குறைவினால், இதனைச் செய்ய இயலாதவர்கள், தங்கள் இல்லங்களில், சனிக்கிழமை மாலையில் கூடுதலாக ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் பரிகார தீபம் ஏற்றி வருவது, உடனுக்குடன் பலனளிக்கும்.
அனுகூல தினங்கள்
சித்திரை: 1-4, 8-11, 15-18, 22, 26-28.
சந்திராஷ்டம தினங்கள்
சித்திரை: 5 காலை முதல், 7 இரவு வரை.